தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அரசால் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்சாரம் வழங்கப்படும் நேரம் தொடர்பாக மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் குரூப் 1, குரூப் 2 என இரண்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட இருக்கிறது. டெல்டா பகுதிகளில் குரூப் 1, குரூப் 2 இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியிலிருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை 9.30 மணியில் இருந்து மதியம் 3.30 மணி வரைக்கும் இரவு நேரத்தில் 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.