தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால், காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கு கடந்த செப்.21ஆம் தேதி நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணை வந்தது. அப்போது, ஆகஸ்ட் மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடகா பிரச்சனை செய்து வருவதாகவும், ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்துவதில்லை எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கர்நாடகாவில் குடிநீருக்கு தண்ணீர் தேவை உள்ளதால், தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறப்பதில் பிரச்சனை உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்தது. இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கவும்மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.