நாட்டிலேயே முதன்முறையாக பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜியா பவல் (21) மற்றும் ஜஹாத் (23). இதில் ஜியா பவல் ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை. ஜஹாத் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி. இளம் பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி தனித்தனியாக வசித்து வந்த இருவரும், காதல் வயப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வாழ விரும்பிய நிலையில், சட்ட சிக்கல்கள் காரணமாக அது முடியாமல் போனது. இதனால், ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று, கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுள்ளனர். இதில், பெண்ணாக பிறந்த ஜஹாத், ஆணாக ஜஹாத் மாறியபோதும் அவரது கருப்பை அகற்றப்படாததால் அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, ஜியா பவலின் விந்தணுக்களை சேகரித்து, செயற்கை கறுவுற்றல் முறையில் ஜஹாத்தின் கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மருத்துவ ஆலோசனையும் பெற்று வந்த இந்த ஜோடி, சமீபத்தில்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் பெற்றோராகப் போகும் தகவலை தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று ஜஹாத்துக்கு குழந்தை பிறந்துள்ளது. கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், நேற்று காலை சுமார் 9.30 மணிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது. ‘ஜஹாத்தும், குழந்தையும் நலமாக இருப்பதாகவும், ஆனால் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நாங்கள் இப்போது பொதுவெளியில் கூற விரும்பவில்லை என கூறி விட்டனர். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவர் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொண்டிருப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.