ராமேஸ்வரம் கடல் பகுதியில் இன்று பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.. இந்நிலையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது..
வரும் 5-ம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா , அரபிக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இன்று 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.. மேலும் பலத்த காற்று வீசும் என்பதால் ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..