கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதே மீன்பிடி தடைக்காலமாகும். தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் இருக்கும். இந்த தடை காரணமாக தமிழ்நாடு முழுவதும் 20,000 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணமாக மாதந்தோறும் ரூ.8,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாட்டின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி இடையிலான கடல் பகுதிகளில் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் இனப் பெருக்கம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிகம் இருக்கும். இதனால், மீன்பிடி தடை அமல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், இந்தாண்டுக்கான மீன் பிடித் தடைக் காலம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.