நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜார் பகுதியில் வசித்து வந்தவர் மாரிமுத்து (44). இவர், கோயில் பூசாரியாக இருந்து வந்தார். இவரது மனைவி வினோதா. இவர்களுக்கு 18 வயதில் மகள், 15 வயதில் மகன் இருக்கின்றனர். இந்நிலையில், ஆயுதபூஜையை முன்னிட்டு கோயிலில் பூஜை செய்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது மாதா கோயில் பகுதியில் ரத்த வெள்ளத்தில் பூசாரி இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த முரளிதரன் என்பவரது மனைவி தனலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து உதயகுமாருடன் (40) திருமணம் செய்யாமல் குழந்தைகளுடன் கோத்தகிரியில் மாதா கோயில் பகுதியில் உள்ள கோவில் மேடு பகுதியில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கோயில் பூசாரி மாரிமுத்துவுக்கும், தனலட்சுமிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று ஆயுதபூஜை பணிகளை முடித்துக் கொண்டு தனலட்சுமியின் வீட்டிற்கு மாரிமுத்து சென்றுள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை உதயகுமார் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது உதயகுமார் தாக்கியதில் மாரிமுத்து உயிரிழந்தார். பின்னர் வீட்டு வாசலில் உடலை போட்டுவிட்டு அதிகாலை இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த உதயகுமார் மற்றும் தனலட்சுமியை கைது செய்தனர்.