சென்னை வேளச்சேரி சசிநகா் அருகே உள்ள ஏரியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மிதப்பதை கடந்த திங்கட்கிழமை அன்று அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். பின்னர், இதுகுறித்து காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அதே பகுதியில் வசித்து வரும் சங்கீதா (26) என்பவரின் குழந்தைதான் ஏரியில் சடலமாக கிடந்த குழந்தை என்பது தெரியவந்தது. திருமணமான நிலையில், சங்கீதாவுக்கு திருமணத்தை மீறிய உறவு மூலம் இந்த குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணமாக அந்த குழந்தையை மறைப்பதற்காக, ஏரியில் வீசி கொலை செய்துள்ளார். இதனை அடுத்து சங்கீதாவை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சங்கீதாவுக்கு திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், இரண்டரை வயது பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. கார்த்திக் மற்றும் சங்கீதா ஆகிய இருவருக்கும் தாய்-தந்தை இல்லாததால் இருவரும் தனியாகவே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் ஒரு பெண் குழந்தை போதும் என முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சங்கீதாவுக்கும், அதே பகுதியில் மல்லிகை நடத்தி வரும் நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து கணவர் கார்த்திக்கு தெரியாமலேயே சங்கீதா பார்த்து வந்துள்ளார். இதற்கிடையே, சங்கீதா கர்ப்பம் அடைந்துள்ளார். ஆரம்பத்தில் சங்கீதா கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இருந்தும் முடியாததால், வயிறு பெரிதான பிறகும் கணவரை ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சங்கீதாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டு குளியல் அறையிலேயே அவரே பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர் கணவருக்கு தெரிந்தால் பிரச்சனையாகி விடும் என்பதால் குழந்தையை அருகில் இருந்த ஏரியில் வீசி விட்டு சங்கீதா, வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தை ஏரியில் மிதந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சங்கீதா மீது சந்தேகம் அடைந்து நடத்திய விசாரணையில், சங்கீதா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.