சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் மருத்துவ படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் இருக்கும் நிலையில், ப்ளு காய்ச்சலினால் சிகிச்சை பெற அதிக குழந்தைகள் நாள்தோறும் அனுமதிக்கப்படுகின்றனர். தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்களுக்கு சென்றாலும் காய்ச்சல் விட்டு விட்டு வருவதால் அரசு மருத்துவமனையை நாடி வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் பொதுவாக குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி ஆகியவை விட்டு விட்டு வருவதாலும், கால நிலை மாற்றம் மற்றும் உணவு முறை போன்றவற்றால் இந்த ஆண்டு குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு மழைக்காலங்களில் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் அளவே தற்போது தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா காரணமாக ப்ளு காய்ச்சல் பரவல் குறைவாக இருந்ததாகவும் தற்போது சிகிச்சை பெறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அதற்கு ஏற்றார் போல மருத்துவ படுக்கைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறையும் மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு பரவி வரும் ப்ளூ காய்ச்சலுக்கான சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.