தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை விழா கோலாலகமாக கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்களில் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக முன்கூட்டியே கொண்டாடினர். இன்று ஆயுத பூஜை பெரும்பாலான இடங்களில், வீடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை என்பது நவராத்திரி விழாவின் 9-வது நாள் விழாவாகும். இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டு அருள் பெற பூஜைகள் செய்யப்படுகிறது.
கல்வி அறிவு பெருக புத்தகங்களை கொண்டும், தொழில்வளம் பெருக தாங்கள் பயன்படுத்தும் ஆயுதங்களை சுத்தம் செய்து பூஜை செய்வதும் வழக்கம். நவராத்திரி 9 நாளும் கொண்டாடாவிட்டாலும், இன்று சரஸ்வதி பூஜை மற்றும் நாளை விஜயதசமி என இரு தினங்கள் அம்மனை வழிபாட்டாலே நவராத்திரியின் முழு பலன் கிடைக்கும். அவல், பொரி, தேங்காய், பூ , பழம் என பூஜை பொருட்கள் வைத்து இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். வேலைக்கான ஆயுதங்கள், இயந்திரங்கள், வாகனங்களை சுத்தம் செய்து அதற்கு சந்தனம், குங்குமமிட்டு பூஜை செய்ய வேண்டும்.
இதற்கிடையே இன்று ஆயுத பூஜை என்பதால் பூ, காய்கறிகள், பழங்கள் விலை வழக்கத்தை விட அதிகமாக விற்பனையாகிறது. தொடர் விடுமுறை என்பதால், வெளியூரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் சென்னை போன்ற பெருநகர பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் சென்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் வகையில் இன்று முதல் புதன் கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து இதுவரை 4.80 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயணிகளுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.