மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் கேஷப் மஹிந்திரா காலமானார். அவருக்கு வயது 99. அண்மையில் வெளியான ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தார். இந்தியாவின் அதிக வயதான கோடீஸ்வரர் என அறியப்பட்டவர். அவரது மொத்த சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர்கள் ஆகும். 1963 முதல் 2012 வரையில் சுமார் 50 ஆண்டு காலம் மஹிந்திரா குழும தலைவராக இயங்கியவர். 1947ஆம் ஆண்டு தனது தந்தையின் நிறுவனமான மஹிந்திராவில் அவர் இணைந்துள்ளார். தொடக்கத்தில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் கவனம் செலுத்தி வந்தார். இவர், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
டிராக்டர்கள் மட்டுமல்லாது ரியல் எஸ்டேட், மென்பொருள் சேவை என பல துறைகளில் அவரது தலைமையின் கீழ் தான் மஹிந்திரா குழுமம் முதலீடு செய்துள்ளது. செவாலியர் de l’Ordre National de la Légion d’honneur விருதை அவருக்கு பிரெஞ்சு அரசாங்கம் வழங்கியுள்ளது. செயில், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், டாடா ஹோட்டல்ஸ், ஐஎப்சி, ஐசிஐசிஐ உட்பட தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் போர்டு உறுப்பினராக பணியாற்றி உள்ளார். ஹட்கோவின் (ஹவுசிங் அண்ட் ஆர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்) முன்னாள் நிறுவனர் தலைவராகவும் கேஷுப் மஹிந்திரா இருந்தார். ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.