நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக கூட்டணியாக இருந்த அதிமுக – பாஜக இந்த தேர்தலில் பிரிந்துள்ளது. இதையடுத்து, இரு கட்சிகளும், தங்கள் கூட்டணியை வலுப்படுத்த மற்ற கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை இழுக்க பாஜகவும், அதிமுகவும் முயன்று வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், கொங்கு மண்டலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுமான வடிவேல், ஆர்.துரைசாமி, எம்.வி.ரத்தினம் உள்ளிட்ட 15 பேர் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். அதோடு தங்களுக்கான உறுப்பினர் அட்டையை பெற்ற போது மோடி வாழ்க.. பாஜக வாழ்க.. என்று முழக்கங்களை எழுப்பினர்.