தனியாா் பள்ளிகளில் 25% இடங்களில் இலவச சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இத்திட்டத்தில் எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். இந்நிலையில் தான், வரும் கல்வியாண்டுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு அடுத்த வாரம் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் சொல்வது என்ன..?
இத்திட்டத்தில் பயன்பெற வாய்ப்பு மறுக்கப்பட்டோர், பொருளாதாரத்தில் நலிந்தோர் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்றோர், HIV பாதிப்புக்கு உள்ளானோர், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. குழந்தைகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்
வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். பெற்றோர், rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் வீட்டின் அருகில் இருக்கும் அதிகபட்சம் 5 பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பள்ளியில் இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.