இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை புரதான சின்னங்கள், அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தொல்லியல்துறை சார்பில் இந்தியா முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள், அருங்காட்சியகம், நூலகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் இன்று (ஆக.5) முதல் வரும் 15ஆம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்பட்டனர். மாமல்லபுரத்திலும் புராதன சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக சென்று பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வெண்ணை உருண்டை பகுதி, கடற்கரை கோயில், ஐந்துரதம், புலிக்குகை உள்ளிட்ட நுழைவு வாயில்களில் இலவச அனுமதி குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்த டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டுள்ளன. இன்று காலை மாமல்லபுரத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் இலவசமாக அனைத்து புராதன சின்னங்களையும் பார்த்து ரசித்தனர். இதனால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இலவச அனுமதியால் மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.