உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதல்வராக நீடித்தது கிடையாது. ஆனால், இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ‘முதலமைச்சரின் வெகுஜன திருமணத் திட்டம்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை எளிய பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படும். இத்திட்டத்தில் இணைய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். cmsvy.upsdc.gov.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பித்தால், மணப்பெண் எந்த மதத்தை சேர்ந்தவராக இருக்கிறாரோ அந்த மதத்தின் படியும், மணப்பெண் குடும்பத்தின் பழக்கவழக்கப்படி திருமணம் செய்து வைக்கப்படும்.
ஆனால், திட்டத்தின் மூலம் பலன் பெற சில நிபந்தனைகள் உள்ளன. அதாவது மணப்பெண்ணின் பெற்றோர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். மணப்பெண்ணுக்கு கட்டாயமாக 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். மணமகன் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இது எல்லாம் சரியாக இருந்தால், பெண்ணின் திருமணத்திற்கு ரூ.51,000 நிதி ஒதுக்கப்படும். இது தவிர பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.35,000 டெபாசிட் செய்யப்படும். மேலும் திருமண நிகழ்ச்சிக்கு ரூ.10,000 கூடுதலாகவும், ரூ.6,000 உணவு கட்டணமாகவும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.