வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல், அனைத்து பஞ்சாயத்துகளும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டாயமாக மாறி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும், வளர்ச்சி பணிகளுக்கான செலவு மற்றும் பொதுமக்களிடம் இருந்து வருவாய் வசூல் ஆகியவை ஆக., 15 முதல் ‘டிஜிட்டல்’ முறையில் மட்டுமே செய்யப்பட வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலர் சுனில்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுதும் உள்ள 98 சதவீத பஞ்சாயத்துக்கள், யு.பி.ஐ., எனப்படும், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனை முறைகளுக்கு ஏற்கனவே மாறிவிட்டன. பஞ்சாயத்துகள் தரப்பில், 1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான செலவுகளுக்கு, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப்பட்டுள்ளன. ரொக்கம் மற்றும் காசோலை வாயிலாக பணம் கொடுக்கும் நடைமுறை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. பொதுமக்களிடம் இருந்து வரும் வருவாய் வசூல் பணிகளையும் டிஜிட்டல் முறைக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திர தினமான ஆக., 15 முதல், அனைத்து பஞ்சாயத்துகளும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டாயமாக மாறி இருக்க வேண்டும். இது தொடர்பான சேவைகளை அளிக்கும், ‘ஜிபே, போன்பே, பேடிஎம், பிம், மோபிவிக், வாட்ஸாப் பே, அமேஸான் பே, பாரத் பே’ உள்ளிட்ட நிறுவனங்களை அணுகி, ஜூலை 30க்குள், சேவை நிறுவனங்களை இறுதி செய்ய பஞ்சாயத்துகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.