இந்தியாவில் சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிம்கார்டுகள் வாங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொழில் நுட்பவளர்ச்சியால் வசதிகள் பெருகினாலும் சைபர் குற்றங்கள் குறைந்தபாடில்லை. சிம்கார்டுகள் மூலம் நிழலுலக சதித் திட்டங்கள் அதிகரித்து முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படாது விற்பனை செய்யப்படும் சிம் கார்டுகளில் பங்கு தான் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. சிம் கார்டுகளை விற்பனை செய்வதிலும், வாடிக்கையாளர் பெறுவதிலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தொலைதொடர்புத் துறை பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. பல்வேறு சைபர் குற்றங்களிலும் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரே பெயரில் ஆயிரக்கணக்கான சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அக்டோபர் முதல், சிம் கார்டுகள் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, போலி ஆவணங்கள் வாயிலாக தவறான நபர்கள் கையில் எண்ணிக்கையில் அதிகமான சிம் கார்டுகள் கிடைப்பதை அக்டோபர் முதல் தடுத்து நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தொலைதொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், முறைகேடாக சிம் கார்டு விற்பனையில் ஈடுபட்ட விற்பனை முகவர்கள் 67,000 பேர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிம் கார்டு புகார்கள் குறித்து இதுவரை 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உரிய ஆவணமின்றி பெறப்பட்டுள்ளன. அத்துடன், ஆன்லைன் குற்றங்களுக்கு துணை போனதாக 52 லட்சம் மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மோசடியாளர்கள் பயன்படுத்திய பல்வேறு வங்கிகளின் 8 லட்சம் வாலெட் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. அதே போல் ஆன்லைன் மோசடிகளுக்கு துணைபோனதாக 66,000 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.