புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. மாநில அஸ்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மன உளைச்சல் ஏற்படுகிறது என முதலமைச்சர் ரங்கசாமி சில நாட்களுக்கு முன்பு மனக்குமுறலை வெளிப்படுத்தினார். இதையடுத்து மாநில அந்தஸ்து விவகாரம் புதுச்சேரியில் சூடுபிடித்தது. நேரு எம்எல்ஏ தலைமையில் சமூக இயக்கங்கள் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்தப்படும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார். இந்த பந்த் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. புத்தாண்டு கொண்டாட்ட காலம் என்பதால் வியாபாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்தனர். வர்த்தகசபை, வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, தொழில் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் வியாபார வர்த்தக சங்கத்தினர் பந்த் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பந்த் போராட்ட தேதியை மாற்றி அறிவிக்கவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், அதிமுக சார்பில் முழுஅடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இதனால் புதுச்சேரி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கிடையே பந்த் அறிவித்த அதிமுக செயலாளர் அன்பழகனை அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். பந்த் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் புதுச்சேரிக்கு வரவில்லை. முன்னதாக பந்த் குறித்து புதுச்சேரி வர்த்தக சபை தலைவர் குணசேகரன் கூறுகையில்,” ஒவ்வொரு முறையும் அரசியல் கட்சிகள் தான்தோன்றிதனமாக பந்த் போராட்டத்தை நடத்துவது தவறு. கடைகளையும், தொழிற்சாலைகளையும் நடத்தும் தங்களிடம் ஆலோசிக்க வேண்டும்” என தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வலியுறுத்தியுள்ளார். மேலும் வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துள்ள அதிமுக, ஒரு நாள் போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாநில அந்தஸ்திற்காக இதை பொறுத்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளது.