இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக கார் டிரைவரை கொலை செய்து காருடன் தீயிட்டு கொளுத்துவிட்டு, புனேவுக்கு ஓட்டம் பிடித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் வெங்கடாபுரத்தில் கடந்த மாதம் 9ஆம் தேதி அன்று, குளக்கரை அருகே எரிந்த நிலையில் ஒரு கார் கண்டுபிடிக்கப்பட்டது. காருக்குள் எரிந்த நிலையில், ஒருவரது சடலமும் இருந்தது. பின்னர், காரில் இருந்த அடையாளங்களை வைத்து போலீசார் விசாரித்ததில், இறந்தவர் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த தர்மநாயக் என தெரியவந்தது. இவர் மாநில செயலகத்தில் நீர்ப்பாசனத்துறையில் மூத்த உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவியும் தனது கணவரின் உடலை அடையாளம் காட்டியதை அடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை வாங்கிய தர்மநாயக்கின் மனைவி மீண்டும் அவரது உடலை எரித்து இறுதிச் சடங்குகளை முடித்து விட்டார்.

இந்நிலையில், தர்மநாயக் மனைவி நீலா, தனது கணவரின் இறப்பு சான்றிதழை வாங்கிக்கொண்டு இன்சூரன்ஸ் பணத்திற்காக விண்ணப்பித்துள்ளார். கணவர் இறந்த 10 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் பணத்திற்காக விண்ணப்பித்துள்ளது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர், இன்சூரன்ஸ் குறித்த விவரங்களை போலீசார் சேகரிக்கும் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. தர்மநாயக் ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் ரூ.2 கோடி வரை பணம் இழந்து, உறவினர்கள் பலரிடம் கடன் வாங்கியிருக்கிறார். தர்மநாயக் மனைவியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது புனேவில் இருந்து அடிக்கடி ஒரு செல்போன் அழைப்பு வருவது தெரிந்தது. அதனை சோதனை செய்தபோது, செல்போனில் பேசியது, இறந்ததாக கூறப்பட்ட அவரது கணவர் தர்மநாயக். உடனே அங்கு விரைந்த போலீசார், செல்போன் சிக்னலை வைத்து தர்மநாயக்கை தூக்கி வந்தனர்.
பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தர்மநாயக், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். இதன் மூலம் ரூ.2 கோடி கடன் வாங்கி, அனைத்து பணத்தை இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டதால், தான் இறந்து விட்டதாக நாடகமாடி அவர்களையும் ஏமாற்றி விட்டு, இன்சூரன்ஸ் பணத்தை வாங்கி ஜாலியாக செலவு செய்ய திட்டமிட்டுள்ளார் தர்மநாயக். இதற்காக புதிதாக ஒரு காரை வாங்கி, நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து பார்டி கொடுத்துள்ளார். பின்னர், டிரைவருடன் காரில் வெளியே சென்ற தர்மநாயக், குளக்கரை அருகே காரை நிறுத்தி, டிரைவரை கொலை செய்துள்ளார். பின்னர், காரில் தயாராக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி காருடன் சேர்த்து டிரைவரையும் எரித்து இருக்கிறார் தர்மநாயக். அதன்பிறகே புனேவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி நீலாவும் உடந்தையாக இருந்ததால் அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.