மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்டத்தின் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ இயக்க உந்தும் வளாகத்தில் ககன்யான் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தின் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக 670 விநாடிகள் மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் 3 பேர் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். பூமியில் இருந்து, 400 கி.மீ. தொலைவில் 3 நாட்கள் விண்வெளியில் இவர்கள் ஆய்வு செய்வர். பின்னர் மீண்டும் பூமிக்கு அழைத்து வரப்படுவர். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சோதனைகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள இன்ஜின்களின் சோதனை, தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள ஆய்வு மையத்தில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ககன்யான் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. பல சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்த இன்ஜின்கள் செயல்படும் வகையிலான சோதனைகள் நடத்தப்பட்டன.