கிண்டி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”கிண்டி ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையில் தான் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்துள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது. ஆளுநர் மாளிகை பாஜகவின் அலுவலகமாக மாறியுள்ளது. பெட்ரோல் குண்டு சம்பவத்தில் நடந்தது குறித்து காவல்துறை சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளது.
மீனவர்கள் விவகாரம் குறித்து எடுத்துரைக்க டி.ஆர்.பாலுவை டெல்லி அனுப்பி வைத்துள்ளேன். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேச அவர் சென்றுள்ளார். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே திராவிடம். இன்னாருக்கு இதுதான் என்று சொல்வது ஆரியம் என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.