ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ரத்தின கற்களை இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த நபர் போலீசில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கடத்தலில் முக்கிய நபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சனிக்கிழமை வந்தது. விமானத்தில் பெருமளவு கடத்தல் பொருட்கள் வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, இலங்கையைச் சேர்ந்த நைமுதீன் என்ற பயணி, சுற்றுலா பயணிகள் விசாவில், சென்னை வந்திருந்தார். அவரிடம் விசாரணையின்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தனர். ஆனால், எதுவும் சிக்கவில்லை.

அவரை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்த போது, அவர் வயிற்றுக்குள் பெரிய கற்குவியல்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர், அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இனிமா கொடுத்து அவர் வயிற்றுக்குள் விழுங்கி வந்தவைகளை சிறிது சிறிதாக வெளியில் எடுத்தனர். ஆய்வில் அவை அனைத்தும் விலை உயர்ந்த முதல் தரமான ரத்தின கற்கள் என்பது தெரியவந்தன. மொத்தம் 1,746 ரத்தின கற்களை விழுங்கி கடத்திக் கொண்டு வந்திருந்தார்.
ரத்தின கற்களின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நைமுதீனிடம் நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சிலரது பெயர்களை கூறியுள்ளார். ரத்தின கற்கள் கடத்தலில் சென்னையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் சிக்கியுள்ளார். அவரிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.