மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைரவனிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் சுகன்யா. இவர் கடந்த ஜனவரி 4ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுகன்யாவின் தற்கொலைக்கு பைனான்சியர் வினோத் என்பவர்தான் காரணம் எனக்கூறி, வினோத்தை கைது செய்யுமாறு பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பைனான்சியர் வினோத்தை சீர்காழி போலீசார், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இறந்த சுகன்யாவின் செல்போனை ஆய்வு செய்த அவரது பெற்றோர் தங்களது பெண்ணின் தற்கொலைக்கு அவரது காதலன் ஜான்டிரோட்ஸ்தான் காரணம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து செல்போன் பதிவுகளுடன் கொள்ளிடம் காவல் நிலையத்தில் சுகன்யாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன் பேரில் கொள்ளிடம் போலீசார், மேற்கொண்ட விசாரணையில் சுகன்யாவின் தற்கொலைக்கு காதலன் ஜான்டிரோட்ஸ்தான் காரணம் என்பதும், தனது நண்பனும் பைனான்சியருமான வினோத்திடம் வாங்கிய கடனை திருப்பி தரமுடியாததால் நண்பன் என பாராமல் வினோத்தை சுகன்யாவின் தற்கொலை வழக்கில் சிக்கவைத்ததுடன் உறவினர்களை தூண்டிவிட்டு சாலைமறியலிலும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஜான்டிரோஸ்சை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.