பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் வசித்து வருபவர் நடராஜ். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளிடம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை பற்றி சிறுமிகள் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி ஒன்றில் பாலியல் பாதுகாப்பு குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பத்துக்கும் அதிகமான சிறுமிகள் தலைமை ஆசிரியரிடம் நாங்கள் வசிக்கும் பகுதியில் மளிகை கடைக்காரர், எங்களிடம் பாலியல் தொல்லை கொடுப்பதாக அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை கூறினர்.
இதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் மளிகை கடைக்காரர் நடராஜனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் மளிகை கடைக்காரர் நடராஜன் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மீது கொலை மிரட்டல் உட்பட 9 பிரிவுகளிலும், போக்சோ சட்டத்திலும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.