பள்ளி மாணவர்களின் மத்தியில் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருவதால், பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட்ஃபோன் கொண்டு வர தடை விதிக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பள்ளிகளில் ஸ்மார்ட்ஃபோனுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும் என்பதற்கான விளக்க அறிக்கையையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஸ்மார்ட்ஃபோன்கள் மாணவர்களின் கவனத்தை திசைதிருப்புகின்றன. ஒருபோதும் கல்வி பயில்வதற்கான சாதனமாக இருக்கவில்லை. யுனெஸ்கோவின் சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கை 2023 கூறியதாவது, ‘கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கை வலியுறுத்தவே செய்கிறது. அதேவேளையில், பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பதை உலகம் முழுவதும் இருக்கும் அரசுகள் கட்டுப்படுத்தி, கண்காணிக்க வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் மற்றும் கல்விக்கான தேவையில்லாத விஷயங்களுக்காக, மாணவர்கள் பள்ளிகளில் அதிக நேரம் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவது நிச்சயம் எதிர்மறையாகவே இருக்கும்’ என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுனெஸ்கோ பொது இயக்குநர் கூறுகையில், ”நிச்சயம் தொழில்நுட்ப புரட்சியானது அளவிட முடியாத பயன்களை உடையதுதான். ஆனால், இந்த சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டியதற்கான சமிக்ஞைகளும் எழுந்துள்ளன. அது மட்டுமல்லாமல் கல்வியில் அந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்போது கூடுதல் கவனம் தேவை. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்மைபயக்க வேண்டுமே தவிர, தீமை விளைவிக்க விட்டுவிடக் கூடாது” என்று தெரிவித்தார்.