கண்டன் விளை அருகே மடவிளாகம் பகுதியை சேர்ந்த சுபிதா. இவர், சந்தை பஸ் நிலையத்தில் இருந்து மகளிர் இலவச அரசு பேருந்தில் நேற்று மதியம் தனது கைக்குழந்தையுடன் ஏறி உள்ளார். இவர் இனையம் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பேருந்தில் ஏறியது குறிப்பிடத்தக்கது. அவர் எரிய பஸ்சில் அதிக கூட்டம் இருந்துள்ளது. இந்நிலையில், பஸ் இரணியல் கோர்ட்டு அருகே வரும் போது சுபிதாவின் கைக்குழந்தையின் கையில் கிடந்த ½ பவுன் தங்க கை சங்கிலியை காணவில்லை. கூட்டத்தில் யாரோ திருடிவிட்டனர் என்பதை அறிந்த சுபிதா, இது குறித்து டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கூறியுள்ளார்.
உடனே டிரைவர் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் பஸ்சை நெய்யூர் தபால் நிலையம் அருகே ஓரமாக நிறுத்திவிட்டு இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, பஸ்சை திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் உள்ள புற காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து போலீசார் பஸ்சில் பயணம் செய்த அனைவரிடமும் சுமார் ½ மணி நேரமாக சோதனை நடத்தினர். ஆனால் கைச்செயின் கிடைக்கவில்லை. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் போலீசாரிடம் இரணியல் பகுதியில் பஸ்சை நிறுத்திய போது இரண்டு பெண்கள் வேகமாக இறங்கி சென்றதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், சுபிதா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து, பயணிகள் கூறிய இடத்தின் அருகில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.