இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 9 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 7 ஆயிரமாக குறைந்துள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000 வரை உயர்ந்தது. இந்நிலையில் இன்று, இந்த எண்ணிக்கை 7,000 ஆக குறைந்துள்ளது.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61,233 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,633 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,702 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 29 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.