தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் நடப்பாண்டு ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேளாண் தொழிலுக்கு உதவும் விதமாக விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் தொடங்கியதை தொடர்ந்து விவசாயிகள் மழையை நம்பி விவசாய பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சூழலில், விவசாயிகள் அரசின் வட்டியில்லா பயிர் கடன்களை பெற்று பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக நடப்பாண்டு ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

அதனால், கடன் தேவையுள்ளவர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நேரடியாக சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும், இதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவை தேவை என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மேலே கூறப்பட்ட ஆவணங்களை கொண்டு சென்று கடன் பெற விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் கூறியுள்ளார். மேலும், இதுவரை கடன் பெறாதவர்கள் உங்களது ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதலில் புதிய உறுப்பினர்களாக சேர வேண்டும். இதற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.