ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி அமைச்சகம் சார்பில் ஆகஸ்ட் 14, 2023 தேதியிட்ட செய்தி குறிப்பில், ஓணம்’ மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கருத்தில் கொண்டு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம்/ஊதியம்/ஓய்வூதியத்தை முன் கூட்டியே வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 25ம் தேதி கேரளாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் தங்களது ஆகஸ்ட் மாத சம்பளத்தை பெறலாம். கேரளாவில் உள்ள அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் வங்கிகள்/பிஏஓக்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் மகாராஷ்டிராவில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் செப்டம்பர் மாதத்திற்கான சம்பளத்தை செப்டம்பர் 27, 2023 அன்று பெறலாம். மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த தேதியில் வங்கிகள்/பிஏஓக்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பணியாற்றும் மத்திய அரசு தொழில்துறை ஊழியர்களின் ஊதியமும் முன்கூட்டியே வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.