புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ. 300 மானியம் வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ. 11,600 கோடிக்கான பட்ஜெட்டை இன்று பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவித்தார். அதில், புதுச்சேரியில் கல்வி தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம்
கொண்டு வரப்படும் எனவும், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி
வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் வீதம் ஆண்டுக்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 126 கோடி ரூபாய் செலவாகும் எனவும் தெரிவித்தார். புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் உள்ளூர் பேருந்துகளில் அட்டவணை இன பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.