மத்திய அரசில் 9.79 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், இன்னும் ஒரு வருடத்தில் ஒரு மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மார்ச் 1, 2021 நிலவரப்படி, பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் இருந்ததாகவும் அதிலும் குறிப்பாக ரயில்வேயில் அதிகபட்சமாக 2.93 லட்சம் காலிப்பணியிடங்கள் இருந்ததாகவும் மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் தேவைக்கேற்ப, காலிப்பணியிடங்கள் ஏற்படுவதும் நிரப்புவதும் ஒரு தொடர்ச்சியான செயல் என்று கூறிய அமைச்சர், நிரப்பப்படாத பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்புவதற்கான அனைத்து அமைச்சகங்களுக்கும் / துறைகளுக்கும் அரசாங்கம் ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இந்திய அரசால், ஏற்பாடு செய்யப்படும் வேலைவாய்ப்பு முகாம்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஊக்கியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ரயில்வேயைத் தவிர, பாதுகாப்பு (சிவில்) துறையில் 2.64 லட்சம் பணியிடங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தில் 1.43 லட்சம் பணியிடங்கள், வருவாய்த் துறையில் 80,243, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் 25,934, அணுசக்தித் துறையில் 9,460 காலியிடங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.