சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட பெருநகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் கோடை காலம் முடிவடையும் வரை சீரான மின் விநியோகம் வழங்குவதை கண்காணிக்க வேண்டும். மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குள் கூடுதல் உயரழுத்த மின் விநியோகப் பிரிவில் பராமரிப்புப் பணிகளை முடிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி, அதிகளவில் மின்தடை ஏற்படும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு தலா ரூ.20 லட்சமும், சென்னை தெற்கு, வடக்கு, ஸ்ரீபெரும்புதூர், திருவலம், விழுப்புரம், கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு தலா ரூ.15 லட்சமும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை பரிசீலித்த தொடரமைப்புக் கழகம், ரூ.1.65 கோடி அவசரகால நிதியை ஒதுக்கியுள்ளது. மேலும் கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த மின் கம்பங்களை உடனடியாக மாற்றவும் , பழுதடையும் நிலையில் உள்ள மின்மாற்றிகள், மின்மாற்றி இணைப்பான்கள் ஆகியவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் அனைத்து மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.