தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து பண்டிகைகள், திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் கச்சபேஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுற்று வட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள 11 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு நாளை (பிப்ரவரி 1) நடைபெற உள்ளது. இதனால், இக்கோவிலை சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள 11 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.