ஈரோடு அருகே, அரசு பள்ளி ஆசிரியை பட்ட பகலில் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் என்று கூறப்படுகிறது. இவருடைய மனைவி புவனேஸ்வரி (53) இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், புவனேஸ்வரி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை 6:30 மணி அளவில், மனோகரன் நடைபயிற்சிக்காக வெளியே சென்று விட்டார். அதன் பிறகு, புவனேஸ்வரி மட்டும் வீட்டில் இருந்திருக்கிறார். மனோகரன் நடைபயிற்சியை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்த பார்த்தபோது, அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள ஒரு அறையில் புவனேஸ்வரி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இது தொடர்பாக, சூரம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பெயரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.