மாணவியின் தவறான முடிவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கொலையா? தற்கொலையா? என விசாரணை செய்ய வேண்டும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மத்திய-மாநில அரசுகள் தற்போது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு எனத் தொடர்ந்து மக்களுக்குத் தேவையான அனைத்தையும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே போகிறது. ஏற்கனவே மக்கள் அதிகப்படியான வரியைச் செலுத்தி வருகிறார்கள். மக்களின் வருமானத்திற்கு என்ன வழி என்பதனை அரசாங்கம் யோசிக்க வேண்டும். அரசாங்கம் என்பது மக்களுக்கானது.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவிலிருந்து மக்கள் இன்னும் மீளாமல் உள்ளனர். ஆனால், அரசாங்கத்திற்கு மட்டும் வருமானம் வர வேண்டும் என்பது தவறு. பேக் செய்த அனைத்து உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதது. இதற்காக தேமுதிக சார்பாகத் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்கான அரசாக அரசாக இருந்தால் அதனை வரவேற்கக் கூடிய விஷயமாக இருக்கும். விஜயகாந்த் கூறியது போல் இந்த விலைவாசி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
தொடர்ந்து பள்ளி மாணவிகள் தவறான முடிவுக்குச் செல்வது அதிகரித்து வருவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்தப் பிரச்சனை சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் போதாது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அந்த மாணவிகள் கொலை செய்யப்படுகிறார்களா? அல்லது தவறான முடிவை எடுத்தார்களா என முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்”. என்றார்.