ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி பயணம் செய்ய உள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் 21-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.இந்த தீர்ப்புக்கு ஏதுவாக ஒரு மாத காலம் நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்திருந்தார். 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். இதனை தொடர்ந்து புதிய உயர்க்கல்வித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பனை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த வழக்கின் தீர்ப்ப்பு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் பொன்முடி உள்ளிட்டோர் மீதான சிறை தண்டனை நிறுத்தி வைத்துள்ளதுடன், ஜாமீனும் வழங்கி இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 11ஆம் தேதி அன்று பொன்முடி உள்ளிட்டோர் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது. திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பழைய அறிவிப்பை ரத்து செய்து சட்டப்பேரவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பொன்முடி தனது எம்.எல்.ஏ பதவியை தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இன்று காலை பொன்முடிக்கு அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி பயணம் செய்ய உள்ளார். மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.