தீபாவளி போனஸாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்களின் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, அகவிலைப்படியானது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை 4% சதவீதம் உயர்த்தி வரும் நிலையில், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. அகவிலைப்படி மட்டுமல்லாமல் போனஸ் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு தனது போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம், மாநிலத்தில் 93 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸாக ரூ.5 ஆயிரம் வழங்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்காக ரூ.45 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.