மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்..
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார்.. அவரின் மரணத்திற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அவரின் மரணம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது, இடறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் போலீசார் தெரிவித்திருந்தனர்.. மேலும் வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்..

இந்நிலையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என உடற்கூராய்வில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.. தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.. மேலும் வாணி ஜெயராம் கீழே விழுந்து தலையில் அடிபட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்றும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
வாணி ஜெயராமின் உடலுக்கு இன்று பிற்பகல் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது.. இந்த நிலையில் வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செல்த்தினார்.. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் வாணி ஜெயராம் என்று புகழாரம் சூட்டினார்..
மேலும் “ பத்மபூஷன் விருதை பெறும் முன்னரே வாணி ஜெயராம் எதிர்பாராதவிதமாக மறைந்தார்.. வாணி ஜெயராமின் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.. காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் அடக்கம் செய்யப்படும்..” என்று தெரிவித்தார்..