தாத்தா சொத்து பேரனுக்கு சொந்தம் என்பது போல் பல படங்களில் வசனங்கள் வரும். ஆனால், உண்மை அதுவல்ல. உண்மையில் தாத்தா சொத்து மகனுக்கு அல்லது மகளுக்குத் தான் உரிமை அதிகம் உள்ளது. அவர்களிடம் இருந்தே பேரனுக்கோ அல்லது பேத்திக்கோ கிடைக்கும். ஆகையால், தாத்தா சொத்து பேரனுக்குத்தான் சொந்தம் என்று கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
இந்தியாவில் தற்போதுள்ள சிவில் சட்டப்படி, தாத்தா சுயமாக சம்பாதித்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்க முடியும். ஆனால் ஒருவேளை உயில் எழுதிவைக்காமல் இறந்துவிட்டால், அவரது உடனடி சட்ட வாரிசுகளான அவரது மனைவி, மகள், மகன் ஆகியோருக்கு கிடைக்கும். அதாவது தாத்தா சுயமாக சம்பாதித்த சொத்துக்களுக்கு உரிமை கோர முடியும். அதேபோல், தாத்தா இறந்துவிட்டால், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைத்த பின்னர் அவை அனைத்தும் தனிநபர் சொத்துகளாகவே கருதப்படும். இந்த சொத்தில் எனக்கு பங்குள்ளது என யாரும் உரிமை கோர முடியாது.
ஒருவேளை தாத்தாவின் ஏதாவதொரு மகனோ அல்லது மகளோ, அவர் இறப்பதற்கு முன் இறந்துவிட்டால், மூத்த மகன் அல்லது மகளுக்கு எவ்வளவு பங்கு கிடைத்ததோ அதேயளவு பங்கு இறந்தவரின் சட்ட வாரிசுகளான மகனுக்கோ அல்லது மகளுக்கோ கண்டிப்பாக கொடுக்க வேண்டும். எனவே, ஒருவருடைய தாத்தா இறந்துபோனால், அந்த தாத்தாவின் சொத்து முதலில் அவரது அப்பாவிற்கு செல்லும். பேரனுக்கு வராது அதன்பிறகே தகப்பனிரிடமிருந்து மகனுக்கு வரும். ஒருவேளை தாத்தா இறப்பதற்கு முன்பே அந்த நபரின் தந்தை இறந்துவிட்டால் மட்டுமே தாத்தாவின் சொத்து நேரடியாக பேரனுக்கு வரும்.
இந்த அடிப்படையில் தான் பல சினிமாக்களில் தாத்தா சொத்து பேரனுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள். அதாவது பேரன் பிறக்கும் போதே மூதாதையர்களின் சொத்திற்கு உரிமையாளராகிறார். ஆனால், முக்கியமான விஷயம் இதில் உள்ளது. ஒருவேளை, தாத்தா இறந்துவிட்டால், அவருடைய மூதாதையர் சொத்து நேரடியாக தந்தைக்கு செல்லுமே தவிர பேரனுக்கு போகாது. ஆனால், மூதாதையர் சொத்தில் தனது பங்கை தந்தை தர மறுத்தால், அப்போது பேரன் நீதிமன்றம் செல்லலாம். அதேநேரம் மூதாதையர் சொத்தை அதாவது பரம்பரை சொத்தை பொறுத்தவரை, அதில் தந்தைக்கும் எவ்வளவு உரிமை உள்ளதோ அதே உரிமை பேரனுக்கும் உள்ளது. உதாரணமாக, தந்தைக்கு 50% சொத்து இருந்தால், பேரன்கள் தங்கள் தாத்தாவின் சொத்தில் தலா 25% பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.