மகாராஷ்டிர மாநிலம் மும்பை மலாட் பகுதியில் கபடி போட்டியில் பங்கேற்ற பி.காம் மாணவர் கீர்த்திக்ராஜ் மல்லன் (20) திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சதாப்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலாட் காவல்துறையும் ஏடிஆரின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, வியாழன் (பிப்ரவரி 9) பிற்பகல் மலாட் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றின் ஏற்பாட்டில் கபடி போட்டியில் பங்கேற்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. விளையாட்டின் போது, அந்த மாணவர் டெட்லைனைத் தாண்டி, எதிரணி வீரர்களைத் தொடச் சென்றார், அவர் வெளியேறிய பின் வெளியே செல்லத் தொடங்கியபோது, திடீரென அவர் தரையில் விழுந்தார்.
இதுபற்றி சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இறந்தவர் மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள சந்தோஷ் நகரில் வசிப்பவர். இவர் கோரேகானில் உள்ள விவேக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கபடி விளையாடும் போது இந்த நிகழ்வை, அங்கிருந்த சில மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கபடி விளையாடும் போது வீரர் ஒருவர் உயிரிழப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, தமிழகத்திலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.