ராணிப்பேட்டை, ஓச்சேரி பகுதியை சேர்ந்த சரவணன், சாம்சங் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் திம்மாவரத்தை சேர்ந்த ஸ்வேதா (எ) ராஜராஜேஸ்வரியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்து கொண்டனர். பின்னர், இருவரும் மறு வீட்டிற்காக திம்மாவரம் வந்துள்ளனர்.
அங்கு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தம்பதி இருவரும் தங்களது அறைக்கு சென்றுள்ளனர். பின்னர் அதிகாலையில், ராஜராஜேஸ்வரி எழுந்து பார்த்த போது அவரது கணவன் சரவணன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜராஜேஸ்வரி கதறி அழுதுள்ளார். ராஜராஜேஸ்வரியின் சத்தம் கேட்டு உறவினர்கள் அனைவரும் ஓடிசென்று பார்த்த போது சரவணன் உயிரிழந்த நிலையில் பிணமாக தொங்கியுள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜராஜேஸ்வரி, மாமனார் தாமோதரன் மற்றும் மாமியார் அலமேலு மூவரிடமும் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து சரவணனின் உறவினர்கள் கூறும்போது, நேற்றிரவு முதலிரவு அறைக்குள் செல்லும் முன் சரவணன் தன்னுடைய பெற்றோரிடம் எப்போதும் போல் பேசியதாகவும் மறுநாள் தனது மனைவியுடன் வெளியில் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.