பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இலவச கார் சர்வீஸ் முகாமை தொடங்கியுள்ளதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இலவச சர்வீஸ் முகாம் நாடு முழுவதும் உள்ள ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப்களில் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் ஜெனரல் கார் செக்கப், பேட்டரி மற்றும் டயர் மதிப்பீடு போன்ற பல சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
அக்டோபர் 16ஆம் தேதி முதலே இந்த இலவச முகாம் தொடங்கியுள்ளது. இந்த மாதம் முழுவதும் நடைபெறும் இந்த முகாமில், வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களோடு நேரடியாக வந்து, நல்ல நிலைமையில் கார் உள்ளதா, காரில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா, ஏதாவது புதிதாக மாற்ற வேண்டுமா என்பதை பரிசோதித்துக் கொள்ளலாம்.
இந்தப் பண்டிகை காலத்தில் அனைத்து ஹோண்டா வாடிக்கையாளர்களையும் சந்தோஷப்படுத்தவே இந்த முயற்சியை தொடங்கியுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இலவச சர்வீஸ் முகாமில் பல்வேறு பண்டிகை கால சலுகைகள், தள்ளுபடிகள் ஆகியவற்றோடு இலவசமாக உட்புறமும் வெளிப்புறமும் கார் வாஷ் செய்து தரப்படும். மேலும், காரின் பெயிண்ட், டயர் மற்றும் காரை அழகுப்படுத்தும் கூடுதல் சேவைகளுக்கு தள்ளுபடியும் தருகிறது ஹோண்டா நிறுவனம்.
இதுகுறித்து ஹோண்டா நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “இந்த பண்டிகை கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இலவச சர்வீஸ் முகாமை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் பலவித சேவைகள் இலவசமாகவும் தள்ளுபடி விலையிலும் தரப்படுகிறது. ஆகவே, இந்த சேவையை வாடிக்கையாளர்கள் அனைவரும் சரியாக பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்றனர்.