தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், “நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழான அறிவிப்பில் 27 சதவீதம் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால், அதிமுக ஆட்சியில் 110 அறிவிப்பில் 68 சதவீதம் பணிகளை நிறைவேற்றி உள்ளோம் என்று நிதியமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் உள்ளது. நிதியமைச்சர் பொய்யான தகவலை சொல்லி வருவதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “அட்சய பாத்திரம் திட்டத்தின் மூலமாக சென்னை மாநகராட்சி பள்ளியில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. இத்திட்டத்தை முதலில் தொடங்கியது அதிமுகதான். மேலும், அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்தில் உணவுகளை ருசியாக கொடுத்தோம். ஆனால், திமுக ஆட்சியில் பணிபுரியும் ஆட்களை குறைத்து, தரமான உணவு இல்லை என்பதால் உணவு சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்றார். பாஜக- அதிமுக கூட்டணி விவகாரம் குறித்து பேசுகையில், ”அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.