ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில்களை சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து பல தலைவர்கள் கோயில் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு இன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கோயிலைச் சுத்தம் செய்வது புதிதல்ல. ஒவ்வொரு பகுதியிலும் கோயில்களைச் சுத்தம் செய்தால் நம்மைப் பார்த்து மற்றவர்களும் சுத்தம் செய்ய வருவார்கள். கோயிலைச் சுத்தமாக வைத்தால் நாம் கோயிலுக்குப் போகும்போது நிம்மதி கிடைக்கும். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சுத்தம் செய்வோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் இளம்பெண் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது குறித்தான புகாருக்கு பதிலளித்த குஷ்பு, “ஆளும் கட்சியான திமுகவினர் வீட்டிலேயே உள்ள சிறுமிக்கு கொடுமை நடந்துள்ளது. ஆளுங்கட்சியினர் வீட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால், தமிழ்நாட்டில் எங்கே பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும்” எனக் கேள்வி எழுப்பினார். திமுகவுக்கு மட்டுமின்றி இங்குள்ள அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று. இது ஏன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தெரியும். முதலமைச்சர் இதுவரை வெளியே வந்து பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக பேசி நான் பார்த்தது இல்லை” என்றார்