காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு வேட்புமனுவை மூத்த தலைவர்களுள் ஒருவரான சசி தரூர் சார்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதில் போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனுக்களை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 30-ம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சசி தரூர் சார்பில் அவரது ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சியின் தேர்தல் குழு தலைவர் மதுசூதனன் மிஸ்திரியிடம் வேட்புமனுவை பெற்றுள்ளனர். மேலும், சசி தரூர் மொத்தம் 5 செட் வேட்புமனுக்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் யார்யார்களத்தில் இறங்கப் போகின்றார்கள் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும். முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் இத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் , இதுவரை இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. இருப்பினும் அவர் இத் தேர்தலில் போட்டியிடுவதில் விருப்பமில்லை என்பது போலவே பேசி வருகின்றார்.