புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகள் ஜெகதீஸ்வரி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் பரிக் என்பவரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு மதம் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் இடையூறாக இருந்துள்ளனர். இதற்கிடையே, இம்ரான் ஃபரிக் மலேசியா சென்றுவிட்டார். அங்கிருந்து ஜெகதீஸ்வரியை தொடர்பு கொண்ட அவர், மலேசியாவுக்கு அவரையும் வர கூறியுள்ளார். இவரும் கடந்த 2022 ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மலேசியாவில் இருந்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், ஜெகதீஸ்வரி கர்ப்பமடைந்தார்.
இதனை தெரிந்து கொண்ட இம்ரான், அவரை மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி உள்ளார். தற்போது ஊருக்கு செல்… பின்னர் அங்கு வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவரை மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜெகதீஸ்வரி தனது தாய் வீட்டிற்கு வந்து நடந்ததை எல்லாம் கூறிய பிறகு ஜெகதீஸ்வரியின் பெற்றோர் அவரது காதலரின் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கூறி மறுத்துவிட்டனர். இந்த நிலையில், இம்ரான் பஃரிக் ஜெகதீஸ்வரிடம் செல்போனில் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரி தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து கண்ணீர் மல்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், தனது காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும் அல்லது தன்னை ஆசை வார்த்தை கூறி குடும்பம் நடத்தி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.