தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த மற்றும் அடித்துச் செல்லப்பட்ட ஆவணங்களை பெற சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமபதி அறிவித்துள்ளார்.
கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வந்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடந்த 17, 18ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. வீடுகள் இடிந்ததோடு, சிலர் உயிரிழந்தனர். மேலும் கால்நடைகள் பலியாகின. மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டனர். அதோடு இளைஞர்கள், மீனவர்களும் மக்களை காப்பாற்றினர். இதற்கிடையே, தூத்துக்குடி, நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான், தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் மக்களின் கல்வி சான்றிதழ்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் சேதமாகி உள்ளன. மேலும், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களை இலவசமாக மக்கள் பெற்று கொள்ள தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. மேலும், இதற்கான சிறப்பு முகாம்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடத்த வேண்டும் என தெரவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவணங்களை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்கள், சான்றுகளை பெற ஏதுவாக இன்று (டிசம்பர் 28) மற்றும் நாளை (டிசம்பர் 29) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த 2 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று மக்கள் தங்களின் சான்றிதழ், ஆவணங்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.