தமிழ்நாட்டில் உள்ள தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகள், போலீஸ், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு டிராபிக் விதிகளை மீறி, போலீசில் தப்பித்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களுக்கு குறிப்பிடும் ‘G’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், ‘இந்திய அரசு’, ‘தமிழ்நாடு அரசு’, ‘உயர்நீதிமன்றம்’, ‘காவல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அரசு சின்னங்களை ஒட்டிக்கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி, தனியார் வாகனங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜரானார். இதே விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 2022 ஜனவரி 19ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து, செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, விதிமீறல்களில் ஈடுபட்ட 1 லட்சத்து 4 ஆயிரத்து 17 தனியார் வாகனங்கள் கண்டறியப்பட்டு அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், 16 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற அரசு முத்திரைகள், பெயர்கள், சின்னங்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனவும் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தெரிவித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கை என்பது ஒரு தொடர் நடைமுறை என்பதால், இந்த நடவடிக்கைகளை தொடரும்படி அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.