சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவதால் திமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்.பி கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழக மக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டதில்லை. பெரும்பான்மை இந்து மக்கள், ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து மக்களுக்காக உழைக்க கூடிய இயக்கம் திமுக. பெரும்பான்மை என பயன்படுத்தி கொண்டு அரசியல் செய்ய கூடியவர்கள் தான் அதற்கு எதிரானவர்கள். சாதி, மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க கூடிய அரசியலை ஒதுக்க வேண்டும் என இதை தொடர்ந்து சொல்லி கொண்டு வருகிறோம்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய்
அரசியலுக்கு வர எல்லா உரிமையும் உள்ளது. சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. முதலமைச்சரின் நல்லாட்சிக்கான பரிசாக மக்கள் வாக்களிப்பார்கள். யாருடைய அரசியல் எப்படி இருக்கும் என ஆரூடம் சொல்லும் நிலையில், நான் இல்லை. அரசியல் களத்திற்கு வர வேண்டும் என முடிவு செய்து விட்டு வந்துள்ளார். அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என கருத்து சொல்ல முடியாது” என தெரிவித்தார்.