மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் சாலையில், இளம் ஜோடி சண்டை காரில் இருந்து இறங்கி நடு ரோட்டில் சண்டை போட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக எஸ்எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாத் பட்டாச்சாரியா என்பவரின் மகள் அங்கீதா பட்டாச்சாரியா என்பதும் அவர் துணை நடிகை என்பதும் தெரியவந்தது. இவர், தனது ஆண் நண்பரான பீகார் மாநிலம் ராம்நகர் வெஸ்ட் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவருடன் மும்பையில் இருந்து கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதையடுத்து, கோவையில் வாடகை கார் எடுத்து இருவரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்க்க திட்டமிட்டிருந்தனர். நேற்று மதுரையில் விடுதி ஒன்றில் தங்கிய இருவரும் இன்று மாலை ராமேஸ்வரம் செல்ல தயாரான நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகியதாகவும், துணை நடிகையான சங்கீதா பல்வேறு படங்களில் நடித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றி பார்க்க திட்டமிட்டு இருந்த நிலையில், தனது ஆண் நண்பர் தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு தனது பணத்தையும் எடுத்துக் கொண்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறினர். இதையடுத்து இருவரையும் விசாரித்த போலீசார், இருவரும் உடனடியாக தங்களது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். மும்பையில் இருந்து மதுரை வந்து சந்தியில் நின்று சண்டையிட்ட துணை நடிகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.