சென்னையில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியிலும், தென் கிழக்கு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கில் தலா ஒரு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வங்கக்கடலின் தென் மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 10ஆம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இதானல், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பக்கத்தில், சென்னையில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் சமாளிக்கக் கூடிய வகையில் கனமழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.